ஆளுநர் விவகாரம் தொடர்பான முதலமைச்சர் கடிதம்: உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிவைத்த குடியரசு தலைவர்

ஆளுநர் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் எழுதிய கடிதத்தை குடியரசு தலைவர் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். கடந்த 9-ம் தேதி ஆளுநர் சட்டமன்றத்தில் உரை நிகழ்த்தியபோது அரசு தயாரித்துக் கொடுத்த சில பகுதிகளை…

ஆளுநர் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் எழுதிய கடிதத்தை குடியரசு தலைவர் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.

கடந்த 9-ம் தேதி ஆளுநர் சட்டமன்றத்தில் உரை நிகழ்த்தியபோது அரசு தயாரித்துக் கொடுத்த சில பகுதிகளை வாசிக்காததற்கு எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, தேசிய கீதம் பாடப்படுவதற்கு முன்பே சட்டமன்றத்தில் இருந்து அவர் வெளியேறினார். இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளுநர் மீது விமர்சனத்தை முன்வைத்தனர்.

தமிழ்நாடு ஆளுநர் கடந்த 9ம் தேதி சட்டமன்றத்தில் நடந்துகொண்ட விதம் குறித்தும், தொடர்ந்து தமிழ்நாட்டு நலனுக்கு எதிராக  அரசியல் சாசன விதிகளை மீறி செயல்பட்டுவருவது குறித்தும் குடியரசு தலைவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதினார்.

அதனை நேற்று முன்தினம் தமிழ்நாடு அரசு பிரதிநிதிகள் குழு குடியரசு தலைவரை நேரில்  சந்தித்து வழங்கியது. அப்போது  ஆளுநர் செயல்பட்டுவரும் விதம் குறித்து விரிவாக  விளக்கப்பட்டது. அதனை விரிவாகக் கேட்டறிந்த குடியரசு தலைவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு  முதலமைச்சரின் கடிதத்தை மத்திய உள்துறை அமைச்சகத்தின் பார்வைக்கு  குடியரசு தலைவர் அனுப்பியுள்ளார். நடவடிக்கை எடுப்பது தொடர்பாக குடியரசு தலைவர் தனது குறிப்புடன்  முதலமைச்சரின் கடிதத்தை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.