புதுச்சேரியில் காங்கிரஸ் எம்எல்ஏ மல்லாடி கிருஷ்ணாராவ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
புதுச்சேரி நிர்வாகத்துக்குட்பட்ட ஏனாம் தொகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.வாக பதவி வகித்து வருபவர் மல்லாடி கிருஷ்ணாராவ். புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சராகவும் உள்ள மல்லாடி கிருஷ்ணாராவ், மீண்டும் தனது சொந்தத் தொகுதியான ஏனாமில் போட்டியிடப் போவதில்லை என அண்மையில் அறிவித்திருந்தார்.
மேலும், தனது அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்தார். ஆனால், அவரது ராஜினாமாவை முதலமைச்சர் நாராயணசாமி ஏற்கவில்லை. இந்நிலையில், அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து சபாநாயகருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். புதுச்சேரியில் ஏற்கனவே அமைச்சர் நமச்சிவாயம், அவரது ஆதரவு எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான் ஆகியோர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தனர். தற்போது, மல்லாடி கிருஷ்ணாராவும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்திருப்பது அம்மாநில அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.







