கடவுள் வழிபாட்டில் புரட்சியை ஏற்படுத்தியவரும், பக்தர்களால் ‘அம்மா’ என்று அழைக்கப்படுபவருமான மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது ஆன்மிக வாழ்க்கை வரலாற்றை தற்போது பார்ப்போம்…
செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில், கோபால் – மீனாம்பிகை என்ற விவசாயத் தம்பதிக்கு 1941-ம் ஆண்டு மார்ச் மாதம் பிறந்தவர் சுப்பிரமணி. வளர்ந்த பின், சோத்துப்பாக்கம் அரசு ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்த போது, உத்தரமேரூரைச் சேர்ந்த லட்சுமி என்ற பள்ளி ஆசிரியையைத் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அன்பழகன், செந்தில் குமார் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆன்மிகத்துடன் சமுதாயத் தொண்டையும் செய்து வந்தவர் பங்காரு அடிகளார் சென்னையை அடுத்த மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி பீடத்தை நிறுவி ஆன்மிக குருவாக விளங்கி வந்தார். 1970-களின் தொடக்கத்தில், சக்தி பீடத்தை நிறுவி, அருள்வாக்கு சொல்லத் தொடங்கினார். அதன்பின்னர், கொட்டகை அமைத்து, ஆதிபராசக்தி பீடத்தை உருவாக்கியதும், சில ஆண்டுகளில் அங்கு பக்தர்கள் குவியத் தொடங்கினர். 1978-ல் முதன்முதலாக, காஞ்சிபுரத்தில், ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தைத் தொடங்கினார். இன்று வரை 2,500-க்கும் மேற்பட்ட வார வழிபாட்டு மன்றங்களும், 25-க்கும் மேற்பட்ட சக்தி பீடங்களும், தொண்டாற்றி வருகின்றன.
ஆன்மிகப் புரட்சி செய்தவர் பங்காரு அடிகளார்
ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் கருவறையில் பெண்களைப் பூஜை செய்ய அனுமதித்தும், மாதவிடாய்க் காலங்களிலும் பெண்கள் வழிபடலாம் என்ற முறையைக் கொண்டுவந்தும் தமிழ்நாடு முழுவதும் பெண்கள் மத்தியில் ஆன்மிக எழுச்சி ஏற்பட்டது. அவர்கள் ஆண்டுதோறும் மாலை அணிந்து, விரதமிருந்து, ஆதிபராசக்தி கோயிலுக்கு வந்து வழிபட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 15-க்கும் மேற்பட்ட நாடுகளில் இவரைப் பின்பற்றுபவர்கள் உள்ளனர் .
ஆதிபராசக்தி சித்தர் பீடம் சார்பில், மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகள், பள்ளிகள் என ஏராளமான கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பங்காரு அடிகளாரின் ஆன்மிகச் சேவையைப் பாராட்டி, 2019-ம் ஆண்டு மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கிக் கௌரவித்தது.
மேல்மருத்துவத்தூர் கோயில் அருகிலேயே, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சமாதி ஒன்றை கட்டி வைத்துள்ளார் பங்காரு அடிகளார். இந்நிலையில், கடந்த ஓராண்டாகவே உடல்நிலை சரியில்லாமல். சிகிச்சை பெற்று வந்த அவர், மாரடைப்பால் அக்டோபர் 19-ம் தேதி, வியாழக்கிழமை அன்று காலமானார்.