திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி வெறும் கைகளால் கழிவு நீரை சுத்தம் செய்யும் அவலம் அரங்கேறியுள்ளது.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த உணவகங்களில் இருந்து கழிவு நீர் அதிக அளவில் வெளியேறி கழிவு நீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டிருந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் துர்நாற்றம் வீசி வந்த நிலையில் கழிவு நீரை வெளியேற்றுவதற்காக ஊழியர் ஒருவர் அழைத்து வரப்பட்டார். அவர் எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் வெறும் கைகளால் கழிவு நீர் அகற்றிய வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெளிப்புறத்தில் இதுபோன்ற சம்பவம் எங்காவது நடைபெற்றால் அவர்களுக்கு அபராதம் விதித்து அதிகாரிகள் சீல் வைப்பார்கள். ஆனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சில நாட்களுக்கு முன்பு பொன்னேரி அருகே தனியார் பள்ளியில் இரண்டு பேர் கழிவு நீர் சுத்தம் செய்த போது உயிரிழந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே இது போன்ற சம்பவம் அரங்கேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.







