ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது இளைஞர்கள் செல்பி எடுக்க வேண்டாம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழ்நாட்டில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக திருச்சி கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அப்பகுதிகளை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியார்களிடம் பேசிய அவர், ஞாயிற்றுக்கிழமை மழை மற்றும் கொள்ளிடம் ஆற்றில் வரும் தண்ணீரை பொறுத்து கொள்ளிடம் கரையோரம் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து முறையாக அறிவிப்பு வெளியிடப்படும்.
கொள்ளிடம் ஆற்றில் கடந்த 2005 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் வந்த வெள்ளத்தின் அளவைவிட தற்போது குறைவாக வெள்ளம் உள்ளதால் மக்கள் அஞ்ச தேவை இல்லை என்றும் எந்த காரணத்தை கொண்டும் மக்கள் கொள்ளிடம் ஆற்றுப் பகுதிக்கு வர வேண்டாம்.
ஆற்றில் வெள்ளம் மிகுதியாக வரும் போது இளைஞர்கள் ஆர்வம் மிகுதியில் செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அமைச்சர் பொதுமக்களை கேட்டுக் கொண்டார். மேலும், கல்லணையிலிருந்து கொள்ளிடம் ஆறு கடலில் கலக்கும் இடம் வரை தெற்கு பகுதி கரையை பலப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் அதற்காக மாவட்ட ஆட்சியரிடமிருந்து கருத்தரு பெறப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.







