சசிதரூருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தி இடதுசாரிகள் தவறு இழைத்துவிட்டனர் – நடிகர் பிரகாஷ் ராஜ் பேட்டி!

காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தி இடதுசாரிகள் தவறு இழைத்துவிட்டனர் என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். இந்தியாவின் 18-வது நாடாளுமன்ற தேர்தல் தொடங்கியுள்ளது.  மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறும் தேர்தலில்  நாட்டில்…

காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தி இடதுசாரிகள் தவறு இழைத்துவிட்டனர் என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 18-வது நாடாளுமன்ற தேர்தல் தொடங்கியுள்ளது.  மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறும் தேர்தலில்  நாட்டில் உள்ள 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு  ஏப்ரல் 19ம் தேதி நடந்து முடிந்துள்ளது.  இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.

 இரண்டாம் கட்டமாக சில மாநிலங்களில் வருகிற ஏப்ரல் 26ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.  அதற்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.  அதன்படி கேரளாவிலும் வருகிற ஏப்ரல் 26ம் தேதி வாக்குப்பதிவு தொடங்குகிறது.

கேரளத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரிகளுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையேதான் இருமுனை போட்டி நிலவுகிறது. என்னதான் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி அமைப்புகள் தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்தாலும் கேரளத்தில் மட்டும் தனித்தே களம் காண்கின்றன.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேரள் மாநிலம் வயநாட்டில் மீண்டும் போட்டியிட உள்ளார். சில தினங்களுக்கு முன்பு தனது வேட்புமனுவை தாக்கல் செய்த அவர் தீவிர பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகிறார். ராகுல் காந்திக்கு எதிராக வயநாடு தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரும் , அக்கட்சியின் பொதுச்செயலாளாருமான டி.ராஜாவின் மனைவியுமான ஆனி ராஜா போட்டியிடுகிறார்.

இதேபோல காங்கிரஸ் கட்சியின் முக்கிய வேட்பாளரான சசிதரூர் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் போட்டியிடுகிறார். அதேபோல இடதுசாரி கூட்டணி வேட்பாளராக பன்னையன் ரவீந்திரன் போட்டியிடுகிறார். ஆனாலும் சசிதரூர் மற்றும் ராஜீவ் சந்திரசேகர் இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் சசிதரூர் விசயத்தில் அவருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தி இடதுசாரிகள் கூட்டணி தவறிழைத்து விட்டதாக நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளதாவது..

“திருவனந்தபுரத்தில் போட்டியிடும் இடதுசாரி வேட்பாளரை எனக்கு தனிப்பட்ட முறையில்  தெரியும்.  அவர் ஒரு நல்ல மனிதர் மற்றும் நல்ல அரசியல்வாதி. ஆனால் சசிதரூருக்கு  எதிராக வேட்பாளரை நிறுத்தியதில் இடதுசாரிகள் தவறு செய்துவிட்டனர் என்று நான் நினைக்கிறேன்.  தற்போது அரசியல் கட்சிகளை விட நாட்டின் நலனைப் பற்றி சிந்திக்க வேண்டியது மிகவும் அவசியம்.

கடந்த 15 ஆண்டுகளாக சசிதரூரின் உழைப்பை புறக்கணிக்க முடியாது. திருவனந்தபுரம் வாக்காளர்கள் அவரை வீழ்த்திவிட வேண்டாம். கர்நாடகாவில் 10 வருடங்கள் முழுவதுமாக செயல்படாமல் இருந்த சந்திரசேகர் இப்போது திருவனந்தபுரத்திற்கு வந்து, “வளர்ச்சி” தருவோம் எனக் கூறி ஓட்டுக் கேட்கிறார். மக்கள் சிந்தித்து வாக்களியுங்கள்” என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.