கோவையில், தனியார் மருத்துவமனை ஒன்று, சிகிச்சைக்கு வந்தவர்களிடம், சட்டவிரோதமாக ரூ. 25,000 கேட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த விவசாயி ஈஸ்வரன். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் தனது தந்தை பொன்னுச்சாமிக்கு உடல்நிலை சரியில்லாததால், கோவை சுந்தராபுரம் பகுதியில் இயங்கி வரும் அபிராமி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். பொன்னுச்சாமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு சிறுநீர் பாதையில் கல் அடைப்பு உள்பட இரு நோய்களை கூறி அறுவை சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் இதற்கான செலவு ரூ.80 ஆயிரம் எனவும், உடனடியாக ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர். ஈஸ்வவரனும் தந்தையின் மருத்துவ செலவிற்கான ரூ.50 ஆயிரம் பணத்தை கட்டியுள்ளார்.
இதற்கு பிறகு மேற்கொள்ளபட்ட அறுவை சிகிச்சையின் போது அதிக மயக்க மருந்து கொடுக்க இயலாததால் சதைவளர்ச்சி தொடர்பான அறுவை சிகிச்சை மட்டுமே செய்துள்ளதாகவும், 10 நாட்கள் கழித்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் மீதி கட்ட வேண்டி இருந்த ரு.31,000-ஐ செலுத்திவிட்டு, ஈஸ்வரன் தனது தந்தையை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். வீட்டிற்கு சென்ற சில நாட்களிலேய பொன்னுச்சாமிக்கு கடினமான வலி ஏற்பட்டதை தொடர்த்து மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின்கீழ் சிகிச்சை அளிக்க முடியுமா என ஈஸ்வரன் மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்க, அதற்கு விசாரித்து விட்டு தான் கூற இயலும் என கூறிய மருத்துவமனை நிர்வாகம், காப்பீடு திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆனால் அதற்கு முன்பு ரூ.25,000 பணம் சட்டவிரோதமாக தரவேண்டும் எனவும், அதற்கு ரசீதும் எதுவும் கொடுக்கப்பட்ட மாட்டது என கூறியதோடு, காப்பீடு ஒப்புதல் கிடைக்கவில்லை என்றால் முழு தொகையையும் செலுத்த வேண்டும் எனவும் எனவும் அதுவும் பணமாக மட்டுமே செலுத்த வேண்டும் கூறியுள்ளனர்.
பிறகு, ரசீது இல்லாமல் ரூ.25 ஆயிரத்தை, ஈஸ்வரன் கொடுத்ததை தொடர்ந்து மீதமுள்ள மற்ற அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ளன. அறுவை சிகிச்சை செய்து முடிக்கப்பட்ட அடுத்த நாளே முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும், மருந்துகள் வெறும் துண்டு காயத்தில் எழுதிக் கொடுக்கப்பட்டதாகவும், மேலும் ரசீது இல்லாத அந்த மருந்துகளை பெறுவதற்கு பணமாக
மட்டுமே செலுத்த வேண்டும் என வற்புறுத்தியதாகவும் புகார் கூறியுள்ள ஈஸ்வரன், இது தொடர்பாக கோவை சுகாதார பிரிவு இணை இயக்குநரிடம் புகார் அளித்துள்ளதோடு, இது தொடர்பான வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளார்.
அதில், ரசீது இல்லாமல் மருந்துகள் வாங்கியது மற்றும் மருத்துவமனை மேலாளர் சட்டவிரோதமாக ரூ.25 ஆயிரம் கேட்டது பணம் வாங்கியது உள்ளிட்டவை தெளிவாக பதிவாகியுள்ளன. மேலும் சட்டவிரோதமாகவும், ரசீது இல்லாமலும் பணத்தைப் பெறும் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா