கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில், உதகையில் இன்று அதிகாலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்தும் மாலை மற்றும் இரவு நேரங்களில் கடும் உறைபனி பொழிவின் தாக்கமும் காணப்பட்டு வந்தது. பகல் நேரங்களில்கடும் வெயிலின் காரணமாக வனப்பகுதிகளில் உள்ள செடி கொடிகள் கருகி காய்ந்து உள்ளன.
இதனால் வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவியது. குறிப்பாக முதுமலை புலிகள்
காப்பகம், உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதிகள், உதகையிலிருந்து
குன்னூர், கோத்தகிரி வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் மலைப்பாதைகளில் கடும்
வறட்சி நிலவி வருகிறது. இதனால் அவ்வப்போது வனப் பகுதிகளில் காட்டுத் தீ
ஏற்பட்டும் வந்தன.
இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் மழை
பெய்யும் என அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை முதல் உதகை,
குன்னுர், கோத்தகிரி ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் மேக மூட்டத்துடன் கூடிய
சாரல் மழை பெய்து வருகிறது.
இதனால் கடும் குளிர் நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை
பாதிக்கப்பட்டுள்ளதோடு, உதகையில் இருந்து குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட
பகுதிகளுக்கு செல்லும் மலைப்பாதைகளில் நிலவிய கடும் மேகமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு வாகனங்களை இயக்கி வருகின்றனர்.







