தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் கடந்த 20ம் தேதி தொடங்கியது. ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் பாடப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி, தனது உரையை புறக்கணித்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவை 2-வது நாளாக நேற்று முன்தினம் கூடியது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த சேந்தமங்கலம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கு.பொன்னுசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, மறைந்த தொழிலதிபர் அருணாசலம் வெள்ளையன், கவிஞர் ஈரோடு தமிழன்பன், திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன், முன்னாள் மக்களவை தலைவர் சிவராஜ் பாட்டீல் ஆகியோர் மறைவுக்கும், மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இரங்கல் குறிப்புகளை சபாநாயகர் மு.அப்பாவு வாசித்து முடித்ததும் அனைத்து உறுப்பினர்களும் 2 நிமிடங்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர். அத்துடன் சட்டப்பேரவை கூட்டம் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, தமிழக சட்டப்பேரவையின் 3ம் நாள் கூட்டத்தொடர் நேற்று (ஜன.22) நடைபெற்றது. உறுப்பினர்கள் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். இந்த நிலையில், சட்டப்பேரவையின் 4ம் நாள் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஊரக வேலைவாய்ப்பு திட்டம் தொடர்பாக இன்று சட்டசபையில் சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.







