நாட்டின் குடியரசு தினம் வரும் 26ம் தேதி கொண்டாடப்பட உள்ளதையொட்டி, எல்லைப் பகுதியில் ரோந்துப் பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஜம்மு – காஷ்மீர் எல்லையில் ராணுவ வீரர்கள் இரவு-பகலாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில், டோடா பகுதியில் 17 ராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு நேற்று வாகனம் ஒன்று சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த ராணுவ வீரர்கள் அனைவரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில் 7 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தோடாவில் நடந்த துயரமான சாலை விபத்தில் 10 இந்திய ராணுவ வீரர்களை நாம் இழந்தது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சிறந்த சிகிச்சையை உறுதி செய்ய தேவையான அனைத்து அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த கடினமான நேரத்தில் நமது ஆயுதப்படைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் தேசம் துணை நிற்கிறது.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







