“தமிழக மகளிரை வஞ்சித்து உயிரைப் பறிக்கும் திமுக வீழும்” – நயினார் நாகேந்திரன்!

தமிழக சட்டமன்றத்தில் இனி என்றும் உதயசூரியன் உதிக்காது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “திருச்சி மண்ணச்சநல்லூரில் ரூ.8000 கூப்பன் மாதிரி வழங்காததைக் கேட்டதற்குத் திமுகவினர் ஆபாசமாகப் பேசி தாக்கியதில் மனமுடைந்து, பட்டியலினப் பெண் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்துள்ள தகவல் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

தேர்தல் நேரத்தில் விதிமுறைகளை மீறி, கூப்பன் போன்றவற்றைக் கொடுத்து அறிவாலயம் மக்களை ஏமாற்றுவதே மிகத் தவறானது. இதில் அதைக் கொடுக்கும் அகங்காரத்தில், பெண்களை இழிவுபடுத்தி தற்கொலை வரை தூண்டியிருப்பது மிகவும் கொடூரமானது. ஐந்தாண்டுகால ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யாததில் தொடங்கி பெண்களைத் தொடர்ந்து வஞ்சிப்பது வரை எண்ணற்ற அராஜகம் புரிந்த பாவம் திமுகவை விட்டு என்றும் அகலாது! தமிழக சட்டமன்றத்தில் இனி என்றும் உதயசூரியன் உதிக்காது”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.