போராடும் அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்..!

உண்ணாநிலை போராட்டத்தை மேற்கொண்டு வரும் அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை தமிழ் நாடு அரசு நிறைவேற்ற வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில்

”ஊதியப்பட்டை நான்கை (Pay Band four 4@12 years), பணியில் சேர்ந்த 12 ஆம் ஆண்டில் வழங்கிட வேண்டும், அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, கூடுதலாக பணியிடங்களை உருவாக்கி மருத்துவர்களை நிரந்தர அடிப்படையில் பணி நியமனம் செய்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஏழு ஆண்டுகளாக அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FOGDA) போராடி வருகிறது. அவர்களது கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

எனவே அவர்கள், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று முதல், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தை துவக்கி நடத்தி வருகின்றனர்.

போராடும் அரசு மருத்துவர்கள் சங்கங்களின் தலைவர்களை அழைத்துப் பேசி, அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற முன்வர வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.