தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியது தொண்டர்களின் உணர்வை பிரதிபலித்து எடுத்த முடிவு! – எடப்பாடி பழனிசாமி

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியது என்பது தொண்டர்களின் உணர்வை பிரதிபலித்து எடுத்த முடிவு, பொதுச் செயலாளர் என்ற முறையில் நான் எடுத்த முடிவு இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். …

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியது என்பது தொண்டர்களின் உணர்வை பிரதிபலித்து எடுத்த முடிவு, பொதுச் செயலாளர் என்ற முறையில் நான் எடுத்த முடிவு இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

சேலம் மாநகர் மாவட்ட அதிமுக பூத் கமிட்டி  நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றார். அப்போது எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:
அனைவரும் பணியை சிறப்பாக செய்தால் நம்மை எதிர்த்து யார் நின்றாலும் வெற்றி பெற முடியாது. உழைப்புதான் வெற்றி தரும். தேர்தல் அறிவிப்பில் 10 சதவீதம் மட்டும் செய்து விட்டு 95 சதவீதம் செய்ததாக முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல முதல்வர் அறிக்கை வெளியிடுகிறார்.
கடந்த கால ஆட்சி பரவாயில்லை என மக்கள் பேசுவதே தமிழகம் எங்கும் ஒலிக்கிறது. மின்சார கட்டணம், வீட்டு வரி, கடை வரி என மக்கள் மீது தாங்க முடியாத பாரத்தை ஏற்றிய கட்சி திமுக. அனைத்து நகர பேருந்துகளிலும் மகளிர் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என அறிவித்து விட்டு பின்க் பேருந்துகளில் மட்டுமே கட்டணம் இல்லை என ஏமாற்றுகிறார்கள்.
அனைவருக்கும் நகைக்கடன் தள்ளுபடி என அறிவித்து விட்டு தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டும்தான் என ஏமாற்றி விட்டனர். கூட்டுறவு சங்கத்தில் தங்கள் நகைகளை அடமானம் வையுங்கள் என உதயநிதி ஸ்டாலின் சொன்னதை நம்பி பெண்கள் தங்கள் நகைகளை அடமானம் வைத்தனர்.ஆனால் 48 லட்சம் பேரில் 13 லட்சம் பேருக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.
அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதந்தோறும் உரிமைத்தொகை வழங்கப்படும் என சொல்லி விட்டு தற்போது தகுதி வாய்ந்த மகளிர்களுக்கு மட்டுமே உரிமை தொகை என்கிறார்கள்; ஆனால் இதிலும் குளறுபடிதான். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மடிக்கணினி திட்டத்தை நிறுத்தி விட்டார்கள்.

தேர்தல் வந்தால் அழகாக பேசி ஏமாற்றும் தந்திரம் திமுகவுக்கு உள்ளது. தேர்தலின் போது திமுக 520 வாக்குறுதிகளை வெளியிட்டதில் 95 சதவீதம் நிறைவேற்றியதாக பச்சை பொய் கூறி வருகிறது. திமுகவிற்கு வாக்களித்துவிட்டு மக்கள் வேதனையில் உள்ளனர்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியது என்பது தொண்டர்களின் உணர்வை பிரதிபலித்து எடுத்த முடிவு. முப்பதாயிரம் கோடியை காப்பாற்றவே திமுக இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. தமிழக மக்களின் உரிமைகளை காக்கவே அதிமுக போராடுகிறது. அதிமுகவை பொருத்தவரையில் மக்கள்தான் எஜமானர்கள்.

தமிழக மக்களின் எண்ணங்கள் நாடாளுமன்ற தேர்தலில் பிரதிபலிக்கும். 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி பிரம்மாண்ட வெற்றி பெறும். அதிமுக பலம் வாய்ந்த கட்சி, வலிமைமிக்க கட்சி சட்டத்தின் ஆட்சியை நடத்திய கட்சி. மீண்டும் வெற்றி பெற்று நாடாளுமன்றத் குரல் கொடுக்க அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

ரெண்டு கோடி தொண்டர்களில் உணர்வுகளை ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்தனர். பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதாக முடிவு. இது பொதுச் செயலாளர் என்ற முறையில் நான் எடுத்த முடிவு இல்லை. ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களும் எடுத்த முடிவு உணர்வுகளில் பிரதிபலிக்கும் வகையில் எடுத்த முடிவு.

எடப்பாடி பழனிசாமி இன்னும் கருத்து சொல்லவில்லை என பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் பேசி வருகின்றனர். தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அறிவிக்கப்பட்டால் அது அனைவரின் சம்மதத்துடன் அறிவிக்கப்பட்டது. ஒரு கட்சியில் தீர்மானம் நிறைவேற்றினால் அதுவே இறுதி முடிவு.

இவ்வாறு எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.