200 கோடி ரூபாய் பணமோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் 200 கோடி ரூபாய் மோசடி செய்ததாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், மோசடி பணத்தில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை சுகேஷ் சந்திரசேகர் வாங்கி கொடுத்ததாக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. 
இதனடிப்படையில், ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு டெல்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும் வரும் நிலையில், வழக்கு விசாரணைக்காக நடிகை ஜாக்குலின் பெர்னாண்ட்ஸ் இன்று நேரில் ஆஜரானார். அப்போது, பணமோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குமாறு அவரது தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. 
இதனை தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி ஷைலேந்தர் மாலிக், ஜாமீன் மனு மீது அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்டார். மேலும், மனுதாரரின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி, 50 ஆயிரம் ரூபாய் பிணையில் நடிகை ஜாக்குலினுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி ஆணையிட்டார். மேலும், பணமோசடி வழக்கை அக்டோபர் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.







