தமிழ்நாட்டில் 500 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை வடபழனியில் உள்ள ஆதிமூல பெருமாள் கோயிலிலும், அந்த கோயிலுக்குச் சொந்தமான அஞ்சுகம் தொடக்க பள்ளியிலும் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆன்மீகத்திற்கு எதிரான கட்சி என்ற பிம்பத்தை உடைக்கும் விதமாக இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடு உள்ளதாக கூறினார்.
கோயில்களுக்கு சொந்தமான 500 கோடி ரூபாய் மதிப்பிலான, 79 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
கோயில் நிலங்களில் நீண்ட நாட்களாக குடியிருப்பவர்களை வாடகை தாரர்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், வாடகை மறுசீரமைப்பு செய்யப்படும் எனவும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு குறிப்பிட்டார்.







