தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துவருகிறது. மார்ச் மாத இறுதிலேயே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அடுத்த நான்கு நாட்களுக்குத் தமிழகத்தில் அனல்காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் சென்னை விமானநிலையம், ஈரோடு, கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையம், திருச்சி, திருத்தணி, வேலூர் உள்ளிட்ட பகுதியில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு மேல் பதிவாகியுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழகத்தில் இன்றிலிருந்து அடுத்த நான்கு நாட்கள் வெப்பநிலையானது இயல்பைவிட மூன்றிலிருந்து ஐந்து டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதன் காரணமாக ஒருசில இடங்களில் அனல்காற்று வீசக்கூடும். பொதுமக்கள், விவசாயிகள், தேர்தல் வேட்பாளர்கள், வாக்காளர்கள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் மதியம் 12 மணியிலிருந்து மாலை 4 மணிவரை திறந்தவெளியில் வேலை செய்வது மற்றும் ஊர்வலம் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட மூன்றிலிருந்து ஐந்து டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். இதன் காரணமாக ஒருசில இடங்களில் அனல்காற்று வீசக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரியாக இருக்கும். மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட இரண்டிலிருந்து மூன்று டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். மத்திய அந்தமான் கடல் பகுதியில் தற்போது நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றாழ்த்த பகுதியாக உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.