தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு தோள்பட்டை, முழங்கால் பகுதிகளில் ஏற்பட்ட காயத்தால் இந்தியா – இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகளை கொண்ட டி20 தொடரில் பங்கேற்பதில் சிக்கல் நீடித்துவருகிறது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒருநாள் போட்டி, டி20, ஐபிஎல் தொடர்களில் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தால் இந்திய ரசிகர் மனதில் இடம்பிடித்தவர் நடராஜன். தமிழகர்கள் அவரை ‘நட்டி’ என அன்போடு அழைக்கத் தொடங்கினார்கள்.

இந்நிலையில் வரும் 12-ம் தேதி அகமதாபாத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்க இருக்கிறது. இந்தச் சூழலில் நடராஜனுக்கு தோள்பட்டையிலும், முழங்காலிலும் லேசான காயம் ஏற்பட்டதையடுத்து, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமிக்கு சிகிச்சையுடன் கூடிய பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு நடராஜனுக்கான பந்துவீச்சு பரிசோதனை, உடற்தகுதி சோதனை இன்னும் நிறைவடையாததால், டி20 தொடரில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தேசிய கிரிக்கெட் அகாடெமி வட்டாரங்கள் கூறுகையில் “ நடராஜனுக்கான தோள்பட்டை, முழங்கால் காயம் முழுமையாக குணமாகவில்லை. அவர் உடல் தகுதி பெற்றபின் அணிக்கு அனுப்பி வைக்கப்படுவார். டி20 தொடர் முழுவதும் அவர் விளையாடமாட்டார் எனச் சொல்ல முடியாது. சில போட்டிகளில் அவர் பங்கேற்காமல் போக வாய்ப்பு இருக்கிறது” எனத் தெரிவித்தனர்.