பாக்ஸ்கான் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர தமிழ்நாடு அரசு பாக்ஸ்கான் நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர்- சுங்குவார்சத்திரம் சிப்காட் தொழில்பூங்காவில் அமைந்துள்ள பாக்ஸ்கான் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் பாக்ஸ்கான் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தங்கும் விடுதியில் உணவின் தரம் மற்றும் குறைபாடுகளைக் களையக்கோரி கடந்த 18-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சர்கள் தாமோ அன்பரசன், திட்டக்குடி கணேஷன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு போராட்டத்தை கைவிட வலியுறுத்தினர். மேலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதன் தொடர்ச்சியாக கடந்த 23-ம் தேதி தலைமைச் செயலகத்தில், தொழில்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், காவல்துறை சட்ட ஒழுங்கு கூடுதல் இயக்குநர் தாமரைக்கண்ணன் ஆகியோர் பாஸ்கான் நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின்போது அரசு சார்பில் பல அறிவுறுத்தல்கள் அந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
ஒப்படந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களின் பணிபுரியும் சூழ்நிலைகளை மேப்படுத்துவது, தங்கும் விடுதிகளின் தரத்தை உயர்த்துவது, தேவையான இடவசதி, குளியல் அறை, கழிவறை, குடிதண்ணீர் போன்ற அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும் என்று அந்நிறுவனத்திற்கு வலியுறுத்தப்பட்டது. தங்கும் இடத்திலேயே சமையலறை அமைத்துத் தரமான உணவுகளை சமைத்து உரிய நேரத்தில் வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவசர நிமித்தமாக விடுப்புக் கேக்கும்போது வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.







