தமிழ் நாடு ஆளுநரை பற்றி அருவருக்கத்தக்க வகையில் திமுக பிரமுகர் பேசிய விவகாரம். அவதூறு வழக்கை நீதிமன்றத்தில் தொடர தமிழக அரசுக்கு சென்னை காவல்துறை பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளது.
கடந்த 9ஆம் தேதி சட்டப்பேரவையில் நடைபெற்ற ஆளுநர் உரை மீது பேசிய தமிழக ஆளுநர் தமிழக அரசு கொடுத்த உரையில் ஆளுநர் சில பகுதிகளை தவிர்த்துவிட்டதாக
குற்றசாட்டு எழுந்தது, இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள திமுகவினர்
ஆங்காங்கே இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று திமுக சார்பில் சென்னை விருகம்பாக்கம் 128 வது வட்டத்தில்
நடைபெற்ற பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் அமைச்சர் மா. சுப்பிரமணியன், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா ஆகியோர் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் திமுக தலைமைக் கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தமிழக ஆளுநரை பற்றி அருவருக்கத்தக்க வகையிலும், மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில் ஆளுநரின் துணைச் செயலாளர் பிரசன்னா ராமசாமி சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு புகார் மனு ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த புகார் மனுவில் மாநிலத்தின் சட்டத்தின் தலைவர் ஆளுநர், அவர் மீது திமுக பேச்சாளர் சிவாஜி
கிருஷ்ணமூர்த்தி அருவருக்கத்தக்க வகையில் பேசி கொலை மிரட்டல் விடும் தொனியில்
பேசி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
எனவே அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 124 என்கிற பிரிவின் கீழ் வழக்கு பதிவு
செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளார். இந்த
சட்டப்பிரிவானது நாட்டின் குடியரசுத் தலைவர் மற்றும் மாநிலத்தின் ஆளுநராக
பணியாற்றுபவர்களை அவர்களின் கடமையை செய்யவிடாமல் தடுத்தல், அவர் மீது அவதூறு பரப்புதல்,மிரட்டல் விடுதல் என்கிற வகையில் குற்றமாகும் என
குறிப்பிடப்பட்டுள்ளது.
Rபுகாரை பெற்றுக் கொண்ட சென்னை காவல்துறையினர் இது தொடர்பாக சட்ட
வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த ஆலோசனையின் முடிவில், ஆளுநரை பற்றி அவதூறாக பேசியிருப்பதால் சென்னை காவல்துறை நேரடியாக நடவடிக்கை எடுக்க முகாந்திரம் கிடையாது எனவும் அவதூறு வழக்கை அரசு வழக்கறிஞர் மூலமாக முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தொடருமாறு தமிழக அரசுக்கு சென்னை காவல்துறை பரிந்துரை செய்துள்ளது.
பொதுவாக முதலமைச்சர், ஆளுநர் பற்றி அவதூறு கருத்துக்களை
தெரிவிக்கும் நபர்கள் மீது வழக்குபதிவு செய்யமுடியாது எனவும் நீதிமன்றத்தில்
அரசு மூலமாக வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நடவடிக்கை
எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.







