ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை ஆப்கானிஸ்தானில் ஒளிபரப்ப தலிபான் அரசு திடீர் தடை விதித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ள தலிபான்கள், கடுமையான கட்டுப்பாடுகளை அங்கு விதித்து வருகின்றனர். இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை ஆப்கானிஸ்தானில் ஒளிபரப்ப தலிபான்கள் திடீரென தடை விதித்துள்ளனர்.
போட்டி நடைபெறும் மைதானத்தில், பெண் பார்வையாளர்கள் இருப்பதால் ஐபிஎல் போட்டிகளை தங்கள் நாட்டில் ஒளிபரப்ப அனுமதிக்க முடியாது என்று தலிபான் அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் முன்னாள் செய்தித் தொடர்பாளர், பவாத் அமான் ட்விட்டரில் இதை தெரிவித்துள்ளார். வீரர்கள் பவுண்டரி மற்றும் சிக்சர் அடிக்கும்போது பெண்கள் நடனமாடுவதாலும், மைதானங்களில் பெண் பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்கள் இருப்பதாலும் அதை ஒளிபரப்பக் கூடாது என்று தலிபான் எச்சரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.








