மேலூரில் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய துணை வட்டாட்சியர் மற்றும் இடைதரகர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
மதுரை மாவட்டம் மேலூர் கருத்தபுலியன்பட்டியை சேர்ந்த பிரபு என்பவர் அவரது மனைவி மாலதி பெயரில் 15 லட்சம் மதிப்புள்ள சொத்திற்காக சொத்து மதிப்பு சான்றிதழ் கேட்டு தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.
இதற்கு மேலூர் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் மணிகண்டன் 20 ஆயிரம் ரூபாயை லஞ்சமாக கேட்டுள்ளார். இதனால் பிரபு மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் முறையிட்டுள்ளார். இதனையடுத்து ரசாயனம் தடவிய 20 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை போலீசார் அவரிடம் வழங்கினர். பின்னர் இன்று மாலை பிரபு, மேலூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து துணை வட்டாட்சியர் மணிகண்டனிடம் ரூபாயினை கொடுக்க முற்பட்ட போது அதனை இடைதரகரான மூக்கனிடம் வழங்குமாறு கூறியுள்ளார். அங்கு நின்றிருந்த மூக்கன் 20 ஆயிரம் ரூபாயை பெற்ற போது அங்கு மறைந்திருந்த மதுரை லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி சத்யசீலன் தலைமையிலான போலீசார் இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

பின்னர் இருவரிடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் டி.எஸ்.பி சத்யசீலன் மற்றும் ஆய்வாளர் ரமேஷ்பிரபு உள்ளிட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லஞ்சம் வாங்க முற்பட்டு துணை வட்டாட்சியர் கைதான சம்பவம் மேலூர் தாலுகா அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.







