கொரோனா இழப்பீடு: வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குக் இழப்பீடு தொகை வழங்குவது குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆறு வாரக் காலத்திற்குள் வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கவேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த…

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குக் இழப்பீடு தொகை வழங்குவது குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆறு வாரக் காலத்திற்குள் வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கவேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிருந்தா காரத் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த குடும்பங்களுக்கு மத்திய அரசு சார்பில் ரூபாய் 4 லட்சம் இழப்பீடு தொகை வழங்கவேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு வழக்கறிஞர் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில்,“பொருளாதார நெருக்கடி காரணமாக கொரோனாவால் உயிரிழந்த குடும்பங்களுக்கு இழப்பீடு தொகை வழங்குவது சாத்தியமில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கத் தேசிய பேரிடர் நிதியைப் பயன்படுத்தினால், அந்த திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி காலியாகிவிடும். மத்திய அரசு நிவாரண நிதி வழங்குவதற்குப் பதில் கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாக” தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில்,“சட்டப்பிரிவு பனிரெண்டை பயன்படுத்தி கொரோனாவால் உயிரிழந்த மக்களுக்கு இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார்.

இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் மத்திய அரசின் வாதத்தை நிராகரித்தனர். அதேபோல் சட்டப்பிரிவு பனிரெண்டை பயன்படுத்தி கொரோனாவால் உயிரிழந்த குடும்பங்களுக்குக் கட்டாயமாக இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இழப்பீடு தொகை வழங்குவது என்பது அரசின் விருப்படி அல்ல, சட்டப்படி கட்டாயமாகும். ஆனால் இந்த விஷயம் தொடர்பாக மத்திய அரசுக்கு நேரடியாக உத்தரவு பிறப்பிக்கமுடியாது என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு தொகை வழங்குவது தொடர்பாகத் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆறு வாரக் காலத்திற்குள் வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கவேண்டும் என உத்தரவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.