பள்ளி பேருந்துக்காக நிழல் கூடத்தில் காத்திருந்த மாணவன் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த செம்மண் காடு பகுதி சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் பிரபாகரன் (10) கார்கூடல்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். வழக்கம்போல் பள்ளி செல்வதற்காக செம்மண்காடு பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவன் காத்துக்கொண்டிருந்துள்ளார்.
அப்போது தனியார் கல்லூரி பேருந்தானது நாரைகிணறு பகுதியில் இருந்து மாணவ மாணவிகளை ஏற்றிக்கொண்டு நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தது. குறுகிய சாலை என்பதால் கல்லூரி பேருந்து வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக எதிரே லாரி வந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. லாரி மீது மோதாமல் இருப்பதற்காக கல்லூரி பேருந்து ஓட்டுனர் அன்பழகன் பேருந்து இடதுபுறமாக திருப்பி உள்ளார்.
அப்போது நிழல் கூடத்தில் காத்துக் கொண்டிருந்த 5ம் வகுப்பு பயிலும் மாணவன் பிரபாகரன் மீது கல்லூரி பேருந்து மோதி உள்ளது. பேருந்து மோதிய வேகத்தில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் தனியார் கல்லூரி பேருந்து விபத்துக்குள்ளாகி பேருந்தில் இருந்த மாணவிகள் தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.







