மகாராஷ்டிராவில் பயணிகள் ரயிலும், சரக்கு ரயிலும் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்ட விபத்தில் 50 பேர் படுகாயமடைந்தனர்.
சத்திஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நோக்கி பயணிகள் ரயில் சென்றது. இந்த ரயில் மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியா ரயில் நிலையம் அருகே சென்றை போது, அந்த வழியாக வந்த சரக்கு ரயிலும், ஜோத்பூர் நோக்கி சென்ற ரயிலும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், ரயிலில் உள்ள மூன்று பெட்டிகள் தடம் புரண்டது. இதனால் பயணிகள் ரயிலில் பயணம் செய்த 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இன்று அதிகாலை விபத்து ஏற்பட்டதும் தகவலறிந்து மகாராஷ்டிரா மாநில ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
மேலும் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை பத்திரமாக மீட்டனர். ரயில்வே நிலையம் அருகில் இருப்பதால் மெதுவாக ரயில் இயக்கப்பட்டதாகவும், அப்போது, எதிர்பாராத வகையில் சரக்கு ரயில் மோதியதாகவும் முதற் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர் சேதம் இல்லை என ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.
விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மகராஷ்டிரா மாநில அரசு சார்பில் தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு ரயில்கள் மோதி விபத்து ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
– இரா.நம்பிராஜன்








