தாய், தந்தை தனது சாவிலாவது ஒன்று சேர வேண்டும் என 12ஆம் வகுப்பு மாணவன் தருண் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த சிங்களாந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி.
இவரது மனைவி மேகலா. இவர்களது மகன் தருண் மெட்டாலாவை அடுத்த ராஜபாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், வீட்டில் குடும்பத் தகராறு காரணமாக கடந்த சில மாதங்களாக தாய்,
தந்தை பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் மாணவன் மன அழுத்தத்தில் இருந்து
உள்ளார். பின்னர் தூங்குவதாகச் சென்ற மாணவன் வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.
மேலும், தாய், தந்தை தனது சாவில் ஒன்றாக சேர வேண்டும் எனவும், மேலும் தனது அம்மா மற்றும் அக்காவை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறும், நான் எங்கும் செல்லவில்லை வீட்டின் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பேன் என்றும் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
பின்னர், காலையில் குடும்பத்தினர் எழுந்து பார்க்கையில் தருண் தூக்கில் தொங்கியவாறு இருந்துள்ளார். இதுகுறித்து, குடும்பத்தினர் பேளுக்குறிச்சி காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கடிதம் மற்றும் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று 12ஆம் வகுப்பு தேர்வு நடைபெறும் நிலையில் மாணவன் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.








