பங்கு சந்தை முதலீட்டில் கடும் நஷ்டம் ஏற்பட்டதால் மதுரையில் கணவன் – மனைவி தம்பதியினர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.
மதுரையில் பழைய குயவர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் – லாவண்யா தம்பதி. நாகராஜன் பங்கு சந்தை ஆலோசகராகவும், முதலீட்டாளராகவும் இருந்து வந்தார். இவர் பங்கு சந்தையில் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தார்.
திடீரென பங்கு சந்தையில் ஏற்பட்ட இழப்பீடு காரணமாக பணத்தை இழந்து, கடன் வாங்கி பணத்தை மீண்டும் முதலீடு செய்துள்ளார். தொடர்ந்து பங்கு சந்தை சரிவை சந்தித்தால், நாகராஜன் பெரும் இழப்பை எதிர்கொண்டார்.

இதனால் மனமுடைந்த நாகராஜன் தனது குழந்தைகளை உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு தனது மனைவி லாவண்யாவுடன் வீட்டிற்குள் இருவரும் சேர்ந்து நேற்று தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.
இதனையடுத்து நள்ளிரவு வரை கதவு திறக்காத நிலையில் அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் நேரில் சென்று பார்த்தபோது இருவரும்
உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து உடலை கைப்பற்றிய மதுரை தெப்பக்குளம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பங்குசந்தை முதலீடா, பிட் காயின் ஆன்லைன் முதலீடு போன்ற ஏதேனும் மூலமாக பணத்தை இழந்துள்ளனரா என்ற கோணத்திலும், அவரது வீட்டில் உள்ள லேப்டாப், மொபைல் போன், பென் டிரைவ்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.







