ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் ரெங்கமன்னார் ஆற்றில் இறங்கும் வைபவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்க மன்னார் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற்றது. 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் தலமானது மிக முக்கியமானதாகும். மகாலட்சுமி மானிடப் பெண்ணாக ஸ்ரீ ஆண்டாள் என்ற பெயருடன் பிறந்து பூமாலை சூடி பின் பாமாலை பாடி இறைவனை அடைந்த இத்தளத்தில் ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி தினத்தன்று ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறுவது வழக்கம்.
அதனடிப்படையில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு செண்பகா நதி ஓடிய இப்போதைய
ஆத்துக்கடை தெரு என்றழைக்கப்படும் பகுதியில் ஸ்ரீஆண்டாள் தங்க சேஷ வாகனத்திலும் ஸ்ரீரெங்கமன்னார் தங்க குதிரை வாகனத்திலும் எழுந்தருளி ஆற்றில்
இறங்கினார்.
அதனைத் தொடர்ந்து ஸ்ரீ ஆண்டாளை ஸ்ரீ ரெங்கமன்னார் சுற்றிவரும் வையாளி என்ற வைபவமும் நடைபெற்றது. இந்த வையாளி வைபவம் என்பது ஸ்ரீவில்லிபுத்தூரில் மட்டுமே நடக்கக்கூடிய வைபவம் ஆகும். அதனை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து ஸ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னாரை தரிசனம் செய்து வழிபட்டனர்.
—-ரெ.வீரம்மாதேவி







