ஓசூரில் வெகு விமரிசையாக நடைபெற்ற ஸ்ரீ சுயம்பு கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் அலகு குத்தியும், பூ கரகம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த ஸ்ரீசுயம்பு கோட்டை மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் மாவிளக்கு மற்றும் ஊர் திருவிழா நடைபெறுவது வழக்கம், அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்ற நிலையில், தொடர்ந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு விரதம் இருந்து காப்பு கட்டி பல்வேறு சிறப்பு வழிபாடுகளை நடத்தி வந்தனர். இதில் ஒவ்வொரு நாளும் பால்குடம் எடுத்தல், பூ கரகம் எடுத்தல் மற்றும் தீச்சட்டி எடுத்தல் போன்ற நேர்த்திக்கடன்கள் செலுத்தப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன.
மேலும் விழாவின் முக்கிய நிகழ்வான அலகு குத்தும் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக திருக்கோயிலில் அம்மனுக்கு நள்ளிரவு முதலே சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் வழிபாடுகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வாயில் அலகு குத்தி கொண்டு ஊர்வலமாக திருக்கோயிலை சென்றடைந்து, நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை தரிசித்து வழிபட்டனர்.
இதே போல் ஏராளமான பக்தர்கள் தங்கள் முதுகுகளிலும் அலகு குத்தி, கிரேன் வாகனங்களில் அந்தரத்தில் தொங்கியவரே ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன்
செலுத்தினர். இதைத்தொடர்ந்து பெண் பக்தர்கள் மாவிளக்கு எடுத்து அம்மனுக்கு
வழிபாடுகள் நடத்தினர். இந்த திருவிழாவில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
இந்த திருவிழாவையொட்டி காவல் துறையில் சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதேபோல் ஓசூரில் பிரதான சாலைகளில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது.
—–ரூபி.காமராஜ்







