புதுக்கோட்டை அருகே நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 600 காளைகள் மற்றும் 250 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
புதுக்கோட்டை அருகே நார்த்தாமலை ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில், கோவிலின் பின்புறம் உள்ள திடலில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
இதில் புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், தேனி ,மதுரை ,சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 600க்கும் மேற்பட்ட காளைகளும், அதேபோன்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து 250க்கும் மேற்பட்ட மாடுபுடி வீரர்களும் பங்கேற்றனர். வாடிவாசலில் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்ட காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு அடக்கினர்.
இதில், சில காளைகள் மாடுபிடி வீரர்களின் கையில் சிக்காமல் சுத்தி காட்டி சென்றது. இந்த விழாவை சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். மேலும், இந்த ஜல்லிக்கட்டு விழாவானது நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக நடத்தப்படுவதினால் பரிசுகள் எதுவும் வழங்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
—கா. ரூபி







