தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “கடந்த சில தினங்களுக்கு முன்பு, திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் போதை இளைஞரால் வெட்டப்பட்டு படுகாயமடைந்து, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த பத்தாம் வகுப்பு மாணவன் செல்வன் லட்சுமணன் இன்று உயிரிழந்துவிட்டதாக வெளியான தகவல் மிகுந்த மன வேதனையளிக்கிறது. மீளா துயரில் தவிக்கும் அச்சிறுவனின் குடும்பத்தாருக்கு என்ன ஆறுதல் சொல்லி தேற்றுவதென்றே தெரியவில்லை.
கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நடக்கும் அனைத்து குற்றங்களின் பின்னணியிலும் “போதை” எனும் கோர உருவம் ஒளிந்துள்ளது. பருவ வயதினர் கைகளில் பட்டாக்கத்தியும், அவர்களது கண்களில் கஞ்சா வெறியும் நிரம்பி வழிகிறது. இந்த லட்சணத்தில் “தமிழகத்தில் போதை நடமாட்டத்தையே ஒழித்துவிட்டோம்” எனக் கொஞ்சம் கூட கூசாமல் தம்பட்டம் அடித்துக் கொள்கின்றனர் திமுகவினர்.
தமிழக இளைஞர்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதற்கு பதிலாக இப்படி போதை எனும் பாழுங்குழியில் பலவந்தமாகத் தள்ளிக் கொண்டிருக்கும் அறிவாலயம் அரசு, இனி தப்பித்தவறி கூட ஆட்சி அரியணையில் அமர்ந்துவிடக் கூடாது. வரும் சட்டமன்றத் தேர்தலில் தீயசக்தி திமுகவிற்கு சமாதி கட்டியே தீரவேண்டும், இல்லையேல் மேலும் பல தமிழக இளைஞர்களை போதையின் தீராப்பசிக்கு நாம் பலிகொடுக்க வேண்டியிருக்கும்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







