வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைணவ கோயில்களில் சொர்க்கவசல் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
பெருமாள் கோவில்களில் நடைபெறும் முக்கியமான விழாக்களில் ஒன்றான வைகுண்ட ஏகாதசி ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அதிகாலையில் அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். பின்னர், சொர்க்க வாசல் திறக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பெருமாள் பக்தர்களுக்கு காட்சித் தருவார். அப்போது, பெருமாளை தரிசனம் செய்தால், பாவங்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இன்று அதிகாலை 4.30 மணியளவில், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில், வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், தி.நகரில் உள்ள திருப்பதி திருமலை தேவஸ்தான கோயிலில் சொர்க்க வாசல் இன்று காலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. மூலவரை தரிசித்த பின்னர் பரமபதவாசல் வழியாக பள்ளிகொண்ட காட்சியில் உள்ள பெருமாளை பொதுமக்கள் தரிசித்து வழிபாடு செய்தனர்.
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தி.நகர் திருப்பதி திருமலை தேவஸ்தான கோயிலில் இன்று இரவு 9 மணி வரை பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சேலம் ஸ்ரீ அழகிரிநாதர் திருக்கோயில், சேலம் கோட்டை பெருமாள் கோயில், கோவையில் உள்ள காரமடை ரங்கநாதர்கோயில், மதுரையில் உள்ள கள்ளழகர் கோயில் உள்பட தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு வைணவ திருத்தளங்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.