வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில், இன்று அதிகாலை, 3.40 மணியளவில் பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து சந்தனு மண்டபத்தில் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து இராப்பத்து நிகழ்வின் முக்கிய நிகழ்வாக சொர்க்க வாசல் என்கிற பரமபத வாசல் அதிகாலை 4.45 மணிக்கு திறக்கப்பட்டது. இதையொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள் எதிர்கொண்டு அழைக்க, சொர்க்கவாசல் வழியாக பெரிய பெருமாள் அவரை தொடர்ந்து ஆண்டாள், ரெங்கமன்னார் ஆகியோர் எழுந்தருளினர். இந்நிகழ்வை பக்தர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் பரமபத வாசல் வழியாக சென்று சாமியை தரிசனம் செய்தனர்.
மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு நடைபெற்றது. வைகுண்ட ஏகாதசி நிகழ்ச்சியையொட்டி பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள், மங்கள வாத்தியங்கள் மற்றும் தீவட்டி பரிவாரங்களுடன் எழுந்தருளினார். அதை தொடர்ந்து அதிகாலை 4.51 மணிக்கு சொர்க்கவாசல் நடையானது திறக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று காலை 6.00 மணியளவில் நடைபெற்றது. மூலவர் சன்னதியிலிருந்து ருக்மணி சத்யபாமா தாயார்கள் சமேதராக வைரமுடி கிரீடம் அணிந்து அருள்பாலித்தனர். அதைத்தொடர்ந்து ராஜகோபாலசுவாமி சொர்க்க வாசல் கதவு வழியாக சென்று பெருமாள் வைகுண்ட நாதனாக பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.