ஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்து விசாரிக்க விசாரணை குழு அமைக்க உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
2022ம் ஆண்டின் முதல் சட்டப் பேரவை கூட்டத் தொடர் புதன் கிழமை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதனையடுத்து இரண்டாவது நாளான இன்று பல்வேறு விடயங்கள் விவாதிக்கப்பட்டன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதன் தொடர்ச்சியாக மழை வெள்ள பாதிப்பு குறித்து பேசிய எதிர் கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, “சென்னையில் 2500 கி.மீ வடிகால் வசதிகள் உள்ளது. 5 மாதம் கால ஆட்சியில் தகுந்த நடவடிக்கை மேற்கொண்டிருந்தால் சென்னையில் மழை பாதிப்பை தடுத்திருக்கலாம்.” என்று கூறினார்.
இதற்கு பதிலளித்து பேசிய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, “உண்மையிலேயே அதிமுக தூர்வாரியிருந்தால், தற்போது சென்னையில் தண்ணீர் தேங்கி இருக்காது. சென்னையில் 2,700 கி.மீ வடிகால் உள்ளது.
பருவமழைக்கு 3 மாதம் காலத்திற்கு முன்பே பணிகள் ஆரம்பித்து செயல்படுத்தியதால்தான் சென்னை ஓரளவு தப்பித்தது. வரும் காலத்தில் சென்னையில் மழை நீர் தேங்காமல் நடவடிக்கை மேற்கொண்டு குழு அமைத்துள்ளார் முதலமைச்சர்.
அதிமுக ஆட்சியில் எதுவும் செய்யவில்லை. எங்கெங்கே தடுப்பணை அமைக்க வேண்டும் என அறிந்தும் கூட அதிமுக அரசு பணிகளை மேற்கொள்ளவில்லை.” என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர்,
“அதிமுக ஆட்சியில் தி.நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் அமல்படுத்தப்பட்டது. இப்பகுதியில் பல ஆண்டுகளாக தண்ணீர் தேங்கியதில்லை. இத்திட்டத்தால்தான் தண்ணீர் தேங்கியது. இது அதிமுக செய்த கோளாறு
ஸ்மார்ட் சிட்டி பணிகள் குறித்து கண்காணித்து அறிக்கை அளிக்க விசாரணை குழு அமைக்க உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.” என்றும் கூறினார்.
இதனைத்தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “சென்னையில் தியாகராய நகரில் மழைநீரை அகற்ற கூடுதல் நாட்கள் தேவைப்பட்டது, அதற்கு ஸ்மார்ட் சிட்டி திட்டம்தான் காரணம். தியாகராய நகரில் பல ஆண்டுகளாக தண்ணீர் தேங்கியதில்லை.ஸ்மார்ட் சிட்டி பணிகளின்போது எதையும் யோசிக்காமல் செய்ததன் காரணமாகவே தண்ணீர் தேங்கியுள்ளது.” என்று விமர்சித்தார். மேலும்,
“இது அதிமுக செய்த கோளாறு. ஸ்மார்ட் சிட்டி பணிகளை கண்காணித்து அறிக்கை அளிக்க விசாரணை குழு அமைக்கப்படுகிறது.” என்றும் தெரிவித்துள்ளார்.