சிவகங்கை : பக்தரின் நகை மாயமான விவகாரம் – போலீஸ் விசாரணையில் கோயில் ஊழியர் உயிரிழப்பு!

சிவகங்கையில் கோயிலுக்கு வந்த பக்தரின் தங்க நகை மாயமான விவகாரத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது கோயில் தற்காலிக ஊழியர் உயிரிழந்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு நேற்று முன்தினம் திருமங்கலத்தைச் சேர்ந்த சிவகாமி 73, என்பவர் தனது மகளுடன் தரிசனம் செய்ய வந்திருந்தார். சிவகாமியால் நடக்க முடியாத நிலையில் கோயில் தற்காலிக ஊழியர் அஜித் (29), வீல்சேர் கொண்டு வந்து கொடுத்துள்ளார். அப்போது கார் சாவியை அஜித்திடம் கொடுத்த பெண்கள் காரை பார்க் செய்யுமாறு கூறியுள்ளனர்.

அஜித்திற்கு கார் ஓட்ட தெரியாததால் அருகில் இருந்தவருடன் காரை பார்க் செய்து சாவியை கொடுத்துள்ளார். இதையடுத்து சாமி தரிசனம் முடிந்து காரில் புறப்பட்ட போது காரின் பின் சீட்டில் கட்டைப்பையின் அடியில் வைத்திருந்த பத்து பவுன் தங்க நகை மாயமாகியுள்ளது. இதனை தொடர்ந்து சிவகாமி அஜித்திடம் விசாரித்த போது உரிய பதில் இல்லை என கூறப்படுகிறது.

இதனையடுத்து சிவகாமி திருப்புவனம் காவல்துறையில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் அஜித் உள்ளிட்ட சிலரிடம் நேற்று கோயில் அருகே வைத்து விசாரணை செய்துள்ளனர். அப்போது அஜித்திடம் விசாரணை செய்த போது மயங்கி விழுந்துள்ளார். உடனே அவரை திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது அஜித் உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து அஜித்தின் உடல் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.