பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா அளித்த ஜாமின் மனுவை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் ஸ்ரீ சுஷில் ஹரி இண்டர்நே ஷனல் பள்ளியில் படித்தபோது சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் புகாரளித்திருந்தனர். இதனையடுத்து அந்த புகாரின் பேரில் அவர் மீது போக்சோ சட்டத்தில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. பின்னர், தலைமறைவான சிவசங்கர் பாபாவை, சிபிசிஐடி போலீசார் ஜூன் 16ஆம் தேதி டெல்லியில் கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பின்பு ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இரண்டாவது முறையாக ஜாமீன் கோரி சிவசங்கர் பாபா தொடர்ந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, சிவசங்கர்பாபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிவசங்கர் பாபா கடந்த 6 மாதங்களாகச் சிறையில் இருந்து வருவதாகவும், அனைத்து விசாரணையும் நிறைவடைந்து விட்டதாகவும் தெரிவிக்கபட்டது. மேலும் ஏற்கனவே, இரு வழக்குகளில் சிவ சங்கர் பாபாவிற்கு கீழமை நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுவினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.







