அண்ணா தொழிற்சங்க பேச்சு வார்த்தையில் இழுபறி

அண்ணா தொழிற்சங்கத்தின் 14வது ஊதிய ஒப்பந்த 7ம் கட்ட பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டதையடுத்து மீண்டும் நாளை பேச்சுவார்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர் போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் அண்ணா…

அண்ணா தொழிற்சங்கத்தின் 14வது ஊதிய ஒப்பந்த 7ம் கட்ட பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டதையடுத்து மீண்டும் நாளை பேச்சுவார்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர் போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் அண்ணா தொழிற்சங்கத்தின் 14வது ஊதிய ஒப்பந்ததின் 7ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. இதில்  போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் கோபால், நிதித்துறை இணை செயலாளர் அருண்சுந்தர் தயாளன், தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் லட்சுமி காந்தன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட 67 தொழிற்சங்கத்தினர் பங்கேற்றனர். வழக்கமாக ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை கலந்துரையாடல் அரங்கத்தில் அனைத்து தொழிற்சங்கத்தினர், துறையின் அமைச்சர், செயலாளர் பங்கேற்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தையாக நடைபெறும்.

ஆனால் இன்றைய பேச்சுவார்த்தையில் தொழிற்சங்க பிரதிநிதிகளை தனித்தனியாக வரவழைத்து , தனி அறையில் அமைச்சர் சந்தித்தார். இறுதியாக கலந்துரையாடல் அரங்கத்தில் அனைத்து தொழிற்சங்கத்தினருடன் அமைச்சர் சிவசங்கர் ஆலோசனையில் ஈடுபட்டார்.

ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை காலத்தை நான்கு ஆண்டுகளாக அதிகரிக்கும் அரசின் முடிவிற்கு தொழிற்சங்கத்தினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததாலும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் அகவிலைப்படி உயர்வு தொடர்பாக இறுதி முடிவு எட்டப்படாததாலும் பேச்சுவார்த்தையில் பின்னடைவு ஏற்பட்டது. எனவே தொடர்ந்து இரண்டாவது நாளாக நாளையும் பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

பின்னர் அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், அண்ணா தொழிற்சங்கம் சார்பில் கடந்த 16ம்தேதி உண்ணாவிரதம் நடைபெற்றது. அந்த உண்ணாவிரத எழுச்சியால் இன்று பேச்சுவார்த்தை நடந்தது. ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை இன்று முடிவுக்கு வரும் என நினைத்தோம். அமைச்சர் ஏற்கனவே பேசியது இல்லாமல் புதிய பிரச்சனைகள் தொடர்பாக மட்டும் தனி அறையில் வந்து பேசுமாறு கூறினார். இன்றைய பேச்சுவார்த்தையில் வெளிப்படைத் தன்மை இல்லை. நாளை மீண்டும் வந்து கலந்து கொள்வோம். இன்று பங்கேற்ற 67 தொழிற்சங்கமும் தனித்தனியாக சந்திக்க வேண்டும் என்று கூறினார்.

நாளை அமைச்சரின் அணுகுமுறை யை பொறுத்து எங்களது முடிவு அமையும். எங்களது கோரிக்கையை அமைச்சரிடம் வலியுறுத்த வாய்ப்பு கிடைக்கவில்லை. கூட்டமைப்பில் உள்ள சங்கத்தினர் மட்டும் அமைச்சரை சென்று பார்த்தனர். அனைத்து சங்கங்களும் தனிப்பட்ட கருத்து இருந்தால் தனியாக வந்து கூறுங்கள் என்று அமைச்சர் கூறியதை நாங்கள் ஏற்கவில்லை. விவாதமே இல்லாமல் அமைச்சருடன் தனியாக சென்று பேச எங்களுக்கு விருப்பமில்லை. அடுத்தகட்ட நிலைப்பாடு குறித்து நாளை அறிவிப்போம் என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.