வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு சீமான் இரங்கல்!

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “வியட்நாம் நாட்டின் ஃபூ குவோக் தீவு அருகே சுற்றுலா பயணிகள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 தமிழர்கள் உட்பட மொத்தம் 36 பேர் உயிரிழந்த பெருந்துயரச் செய்தியறிந்து அதிர்ச்சியும் மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரினை பகிர்ந்துகொள்கிறேன்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு விரைந்து அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க ஒன்றிய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கத்தை செலுத்துகிறேன்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.