சேலத்தில் சட்டவிரோதமாக குழந்தையை விற்பனை செய்ய எடுத்து வந்த இரண்டு இடைத்தரகர்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த குழந்தையை விற்பனை செய்ய மூன்று லட்சம் ரூபாய்க்கு பேரம் பேசப்பட்டுள்ளது. அதன்படி இளம்பெண்ணின் உறவினர் வளர்மதி மூலம் குழந்தை சேலம் எடுத்துவரப்பட்டுள்ளது. குழந்தையை வாங்குவதற்கு ஈரோட்டை சேர்ந்த இடைத்தரகர்கள் லதா மற்றும் அவரது கணவர் மதியழகன் ஆகியோர் சேலம் சீலநாயக்கன்பட்டி ரவுண்டானா பகுதிக்கு வந்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுதொடர்பாக ஏற்கனவே காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் காவல்துறையினர் சாதாரண உடையில் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது குழந்தையை எடுத்து வந்த வளர்மதியிடம் இருந்து குழந்தையை வாங்கி செல்ல வந்த இடைத்தரகர்கள் லதா மற்றும் மதியழகன், இருவரும் குழந்தையை பெற முயற்சி செய்யும்போது கையும் களவுமாக பிடிபட்டனர்.
பின்னர் அவர்களிடமிருந்து, பிறந்த நான்கு நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். அங்கிருந்து குழந்தைகள் நல காப்பகத்திற்கு, அந்த குழந்தை பாதுகாப்பாக அனுப்பப்பட்டது.
பின்னர் சட்டவிரோதமாக குழந்தையை கடத்த முயன்ற அவர்கள் மூவர்மீதும் வழக்குபதிவு செய்து நீதிமன்ற காவலில் அடைக்க, காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் லதா மற்றும் மதியழகன் இருவரும், தொடர்ச்சியாக பல குழந்தைகளை விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கருமுட்டை விற்பனை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. தொடர்ந்து மூவரிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.