வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மறைவு – பிரதமர் மோடி இரங்கல்!

வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.

வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா(80), இதயம் மற்றும் நுரையீரல் தொற்று நோய் காரணமாக டாக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 13-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறப்பு மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருவதாகவும், கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் நேற்று தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கலிதா ஜியா சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “முன்னாள் பிரதமர் காலிதா ஜியா டாக்காவில் காலமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்.

அவரது குடும்பத்தினருக்கும், வங்காளதேச மக்கள் அனைவருக்கும் எங்களின் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த துயரமான இழப்பைத் தாங்கிக்கொள்ள அவரது குடும்பத்தினருக்கு எல்லாம் வல்ல இறைவன் மன வலிமையை வழங்குவாராக. 2015-ம் ஆண்டு டாக்காவில் நடைபெற்ற அவருடனான எனது சந்திப்பை நினைவுகூர்கிறேன். அவரது தொலைநோக்குப் பார்வையும், மரபும் நமது கூட்டாண்மையை தொடர்ந்து வழிநடத்தும் என்று நம்புகிறோம். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.