தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 3 வணிக வங்கிகளில் மட்டும் 2000 ரூபாய் நோட்டுகள் ரூ.2,650 கோடி அளவுக்கு வரவு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த வங்கிகளிலிருந்து கிடைத்திருக்கும் புள்ளிவிவரத்தின் அடிப்படையில், 2,000 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து சில்லறையாக மாற்றிக் கொண்டதை விடவும் வைப்புநிதியாக வரவு வைத்ததே அதிகம் என்று தகவல் வெளியாகியுள்ளது. புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகள் இதுவரை 96% வங்கிகளுக்குத் திரும்பி விட்டதாக அறிவித்திருக்கும் ஆர்பிஐ, 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடுவை அக்டோபர் 7-ம் தேதி வரை நீட்டித்துள்ளது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இதுவரை மொத்தம் 4000 கோடி இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப வந்திருப்பதாகவும், சிட்டி யூனியன் வங்கியில் 726 கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்ப வந்திருப்பதாகவும், தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் 693 கோடி ரூபாய் திரும்பி வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
கடந்த மே 19-ம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் 3.5 லட்சம் கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்ததாகவும், செப்டம்பர் 29-ம் தேதி வரை 3.4 லட்சம் கோடி மதிப்புள்ள நோட்டுகள் திரும்ப வந்துவிட்டதாகவும் அதாவது இது 96% என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, அக்டோபர் 8-ம் தேதி முதல் வங்கிகளில் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளவோ, வங்கிக் கணக்கில் வரவு வைக்கவோ முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







