விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டதால் பட வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து படத்திற்கு தணிக்கை வழங்ககோரி நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டன.
இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் 9ம் தேதி சென்னையில் மறுதணிக்கை நடப்பதாக இருந்தது. ஆனால் அப்போது தணிக்கை வாரிய உறுப்பினருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மறு தணிக்கை ரத்து செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்று ஜனநாயகன் திரைப்படத்தின் மறு தணிக்கை நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் ஜனநாயகன் படக்குழுவிற்கு தணிக்கை வாரியத்திடமிருந்து எந்த அழைப்பு வரவில்லை எனவும் இதனால் மறுதணிக்கை மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜயின் கடைசி படமான ஜனநாயகனின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்போடு காத்திருந்தனர். ஜனவரி மாதம் 9 ஆம் தேதி வெளியாக வேண்டிய நிலையில் மறு தணிக்கை , வழக்கு என படம் வெளியாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருவதால் விஜய் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.







