ரத்தன் பண்டிட் நியமனம் ரத்து – முதலமைச்சருக்கு விஜய்க்கு பிரேமலதா பாராட்டு!

ரத்தன் பண்டிட் நியமனத்தை தமிழக அரசு வாபஸ் பெற்றதற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பாராட்டியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக பிரபல ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேலை நியமித்து நேற்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இவரது நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் விமர்சனங்களை முன்வைத்தன. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சட்டசபையில் இந்த விவகாரத்தை எழுப்பினார். இதனையடுத்து ரத்தன் பண்டிட் நியமனத்தை தமிழக அரசு வாபஸ் பெற்றுள்ளது.

இந்த நிலையில் விஜய்யின் செயல்பாட்டை பிரேமலதா பாராட்டியுள்ளார். இது தொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு தேமுதிக சார்பாக மனமார்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஜோதிடர் ரத்தன் பண்டிட் என்பவரை அரசு பணியில் நியமித்ததைக் கண்டித்து, இன்று சட்டப்பேரவையில் நான் எடுத்துரைத்த கருத்திற்கு உடனடியாக நியமன ஆணையை ரத்து செய்த தமிழக முதல்வர் விஜய் அவர்களுக்கும், தமிழக அரசின் உடனடி நடவடிக்கைக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.