எலி தலையுடன் உணவு வழங்கிய சைவ ஹோட்டலுக்கு மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ பாலாஜி பவன் என்ற சைவ உணவகம் உள்ளது. கடந்த 11ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த முரளி என்ற நபர் வாங்கி சென்ற 35 பார்சல் சாப்பாட்டில் பீட்ரூட் பொரியலில் எலியின் தலை கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து உணவகத்தில் வாக்குவாதம் செய்து ஆரணி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்து வந்தனர். இது குறித்து நமது நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பப்பட்டது. செய்தி எதிரொலியாக திருவண்ணாமலை உணவு பாதுகாப்பு அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள் உணவகத்தில் சென்று ஆய்வு நடத்தினர். ஆய்வின் போது உணவகத்தில் சமையல் கூடத்தில் பாதுகாப்பற்ற முறையில் உணவுகள் தயார் செய்து கொண்டிருப்பதும் உணவகத்தில் எலிகள் அங்கும் இங்கும் நடமாடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
பின்னர், தர மற்ற உணவுகள் வழங்கியதால் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவு பேரில், உணவு பாதுகாப்பு அலுவலர் ராமகிருஷ்ணன், வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சேகர் உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட உணவகத்தின் தரச்சான்றை ரத்து செய்து உணவகத்துக்கு சீல் வைத்தனர்.
ஆரணியில் தரமற்ற உணவுகள் வழங்கினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிறகு, ஆரணி காவல் நிலையத்தில் டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் ஹோட்டல் மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் மத்தியில் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது.
கூட்டத்தில் பேசிய டிஎஸ்பி ரவிச்சந்திரன், ஆரணியில் உள்ள உணவகங்களில் உணவுகள் சாப்பிடுவதற்கு மக்கள் அனைவரும் பயப்படும் விதத்தில் ஆரணியில் உள்ள உணவகங்களில் தரமற்ற உணவுகள் தயார் செய்வது வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது. நிச்சயமாக சொல்லப்போனால் ஆரணியில் உள்ள உணவகங்களில் உணவு சாப்பிடுவதற்கு எங்களுக்கு பயமாக உள்ளது. இனிமேல் இதுபோன்ற தரமற்ற உணவுகள் வழங்கும் உணவுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.







