இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனை சென்றடைந்தது.
இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 8-ம் தேதி இரவு உயிரிழந்ததாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்தது. இரண்டாம் எலிசபெத்தின் உடல், ஓக் மரத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சவப்பெட்டியில் வைக்கப்பட்டு, அவர் உயிர்பிரிந்த பால்மோரல் பண்ணை மாளிகையில் இருந்து கடந்த 11-ந்தேதி, ஸ்காட்லாந்தின் தலைநகரான எடின்பரோ நகருக்கு கொண்டு செல்லப்பட்டது. முதலில் உடல் அங்குள்ள ஹோலிரூட் ஹவுஸ் மாளிகையில் வைக்கப்பட்டது. அங்கு அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் செயிண்ட் கில்ஸ் தேவாலயத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் ராணியின் உடலுக்கு மரியாதை செலுத்தினர். பின்னர் அங்கிருந்து இருந்து விமானம் மூலம் கொண்டு வரப்பட்ட ராணி எலிசபெத்தின் உடல் நேற்று இரவு இங்கிலாந்து சென்றடைந்தது.
லண்டனில் ராணி எலிசபெத்தியின் உடலை மன்னர் சார்லசும், ராணி கமிலாவும் பெற்றுக் கொண்டனர். விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் 2-ம் எலிசபெத்தின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது மறைந்த ராணிக்கு அஞ்சலி செலுத்த வழிநெடுகிலும் சாலையின் இருபுறங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
இன்று பிற்பகலில் ராணியின் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக பீரங்கி வண்டியில் ஏற்றப்பட்டு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டு, பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் ஒரு மேடையில் ராணி எலிசபெத்தின் உடல் வைக்கப்படுகிறது. சவப்பெட்டியின் மீது கிரீடம் மற்றும் செங்கோல் ஆகியவை வைக்கப்படுகின்றன.
இந்திய நேரப்படி இன்று மாலை 5 மணி முதல், இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. வரும் 19-ந்தேதி காலை 6.30 மணி வரை 24 மணி நேரமும் ராணியின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம். 2-ம் எலிசபெத்தின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனை வந்துள்ள நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த குவிந்து வருகின்றனர்.