ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலைசெய்யப்பட்டவர்கள், திருச்சி அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ளதால் தங்களை சுதந்திரமாக வாழ உத்தரவிட கோரிய வழக்கில், தமிழ்நாடு அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட 7 பேரையும் கடந்தாண்டு நவம்பர் 11-ம் தேதி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. இதில் பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் ஆகிய 3 பேரும் இந்திய குடியுரிமை பெற்ற காரணத்தினால் அவரவர்கள் இருப்பிடத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மற்ற 4 பேரும் இலங்கை குடியுரிமை பெற்றவர்கள் என்பதால் வெளிநாட்டவர் பதிவு அலுவலகத்தில் இருந்து உரிய உத்தரவு கிடைக்கும் வரையில் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர். ஆனால் இங்கு வந்து ஓராண்டு ஆகும் நிலையிலும் 4 பேரும் விடுவிக்கப்படவில்லை. அவரவர் விரும்பும் நாடுகளுக்கும் அனுப்பப்படவில்லை. தற்போது சிறப்பு முகாமில் இருக்கும் முருகன் தனது மகளுடன் லண்டனில் இருக்கவும், சாந்தன் தனது தாயுடன் இலங்கை செல்லவும், ராபர்ட் பயஸ் நெதர்லாந்து செல்லவும், ஜெயக்குமார் சென்னையில் வாழவும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அகதிகள் முகாமில் இருந்து ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், சிறையில் இருந்த முந்தைய நாட்களில் இதே நிலையில் இருந்த நாங்கள் 32 வருட துன்பங்களுக்குப் பிறகு மீண்டு வந்துள்ளதாகவும், தற்போதும் அதே அவலநிலை தொடர்ந்ததால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்த மனுக்கள் நீதிபதி சுவாமிநாதன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதனைத்தொடர்ந்து ராபர்ட் பயஸ் தொடர்ந்த வழக்கில், தனது குடும்பம் வெளிநாட்டில் உள்ளதால், வழக்கில் வெளியுறவுத்துறை அமைச்சகத்தை எதிர் மனுதாரராக சேர்க்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும் வழக்கு குறித்து பதில் அளிக்கவும் உத்தரவிட்டு, வழக்கு விசாரணை நவம்பர் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.