பெண் ஒருவருக்கு ஒரே நேரத்தில் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் டவ்சா (Dausa) அருகில் உள்ள கைர்வால் கிராமத்தைச் சேர்ந்தவர் ராம் சரண் சர்மா. இவர் மனைவி கிரண். இருவரும் பக்கத்து ஊரான நங்கல் என்ற பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்துக்கு வெளிக்கிழமை தடுப்பூசி போடச் சென்றனர். அங்கு கிரணுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசியையும் ஒரே நேரத்தில் போட்டதாகக் கூறப்படுகிறது.
இதுபற்றி ராம் சரண் சர்மா கூறும்போது, தடுப்பூசி போட்டுக்கொண்டு நாங்கள் வீட்டுக்குத் திரும்பிவிட்டோம். என் மனைவிக்கு காய்ச்சல் வந்தது. அப்போது விசாரித்தபோது, தனக்கு ஒரே நேரத்தில் இரண்டு டோஸ் தடுப்பூசியை போட்டுவிட்டார்கள் என்று தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்து சுகாதார மையத்தில் விசாரித்தேன். அவர்கள் 2 டோஸ் போட்டதை மறுத்தனர். இருந்தும் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டேன். அவர் பாராசிட்டமல் மாத்திரையை தந்து என் மனைவியை ஓய்வெடுக்கச் சொன்னார்’ என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், டவ்சாவின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் மணீஷ் சோதாரி கூறும்போது, ‘அந்த பெண்ணுக்கு முதலில் தடுப்பூசி போட ஊசிக்குத்தும்போது ரத்தம் வந்ததால் செவிலியர் ஊசியை எடுத்தார். பிறகு கையில் வேறொரு பகுதியில் ஊசி போட்டார். இதை அந்தப் பெண் இரண்டு டோஸ் போடப்பட்டுவிட்டதாக நினைத்துக் கொண்டார். அவர் சொல்வதில் உண்மையில்லை என்று தெரிவித்துள்ளார்.
பின்னர் மருத்துவர்கள் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு சென்று பரிசோதித்து பார்த்ததாகவும் அவருக்கு எந்த பக்க விளைவுகளும் இல்லை என்றும் அவர் நலமாகவே இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.







