உத்தரப்பிரதேச மாநிலத்தில், ரயில்வே பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் விதிகளை மீறி சென்னையில் பணியமர்த்தப்பட்டுள்ளதாக கே. பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், உத்தர பிரதேசத்திலுள்ள கோரக்பூர் ரயில்வே தேர்வு வாரியத்தில் தேர்வு செய்யப்பட்ட 54 பேர், தெற்கு ரயில்வேயில் உதவி ரயில் ஓட்டுநர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஒரு ரயில்வே வாரியத்தில் தேர்வு செய்யப்பட்டவர்கள், வேறொரு ரயில்வே வாரியத்தில் நியமிக்கப்படக்கூடாது என விதிகள் தெளிவாக இருந்தும், கோரக்பூரில் தேர்வானவர்களை சென்னையில் நியமித்தது சட்ட விரோதம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கை தென் மாநில ரயில்வே விண்ணப்பதாரர்களின் வேலைவாய்ப்பை பாதிப்பதோடு, ஜனநாயக அமைப்பை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் மத்திய ரயில்வே துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் கூறினார்.
இந்த விவகாரத்தில், மத்திய அரசு உடனடியாக தலையிட்டு கோரக்பூர் விண்ணப்பதாரர்களை கோரக்பூருக்கு திருப்பி அனுப்பிவிட்டு, தென் மாநில ரயில்வேயின் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை கொண்டு உதவி ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.