அதிமுக பொதுக்குழு கூட்டம் 11-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், கூட்டத்திற்கு வரும் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையில் புதிதாக கியூஆர் ஸ்கேன் சோதனை செய்யப்படும் என முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள வானகரத்தில் வருகின்ற 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, பொதுக்குழு கூட்டம் நடத்தக்கூடாது என ஓ.பன்னீர்செல்வம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றம் பொதுக்குழு நடத்தலாம் என உத்தரவிட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து நீதிமன்ற உத்தரவுபடி 100 பேர் அமரக்கூடிய வகையில் 2 ஆயிரம் சதுர அடியில் பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் விரைந்து பணிகளை முடிக்குமாறு அறிவுறுத்தினார்.
இந்நிலையில், 11-ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவுக்கு வருகை தரும் உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்கு அடையாள அட்டையில் கியூஆர் ஸ்கேன் சோதனை செய்யப்படும் என பெஞ்சமின் தெரிவித்தார். கடந்த முறை பொதுக்குழு நடைபெற்ற போது, அடையாள அட்டையில் உறுப்பினர்கள் புகைப்படம் இடம் பெற்றிருந்த நிலையில், போலி அட்டைகள் பயன்படுத்தப்பட்டதாக சில புகார்கள் எழுந்தன.
இதனால் இந்த முறை அடையாள அட்டையில் கியூஆர் ஸ்கேன் சோதனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. அதிமுக பொதுக்குழு நடக்குமா நடக்காதா என்ற சர்ச்சைகளுக்கு மத்தியில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய உடனே அதிமுக
தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அமரக்கூடிய வகையில் பிரமாண்ட மேடை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இதனால் பொதுக்குழுவில் எந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. குறிப்பாக ஒற்றை தலைமை விவகாரம் எவ்வாறு முடிய போகிறது என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
– இரா.நம்பிராஜன்