“புதுச்சேரி விடுதலை நாள்” இன்று கொண்டாடப்படுகிறது, கடற்கரை சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இந்தியா ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பிறகும் புதுச்சேரி தொடர்ந்து பிரஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்தது (பிரஞ்சு ஆதிக்கத்தின் கீழ் புதுச்சேரி கிட்டத்தட்ட 300 ஆண்டுகள் இருந்தது). 1954 ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி புதுச்சேரி இந்தியாவுடன் இணைந்தது. இந்த தினம் ஆண்டுதேறும் புதுச்சேரி விடுதலை நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்று, புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து மாணவர்களின் அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் பேசிய நாராயணசாமி, புதுச்சேரியின் பழைமை வாய்ந்த புராதன வரலாற்று சின்னங்களை பாதுகாக்க 107 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் எனவும் முதல்வர் ரங்கசாமி விடுதலை நாள் நிகழ்ச்சியில் அறிவித்தார்.
அரசுத் துறைகளில் காலியாக உள்ள பத்தாயிரம் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும், மூடப்பட்டுள்ள கூட்டுறவு நியாய விலைக்கடைகளை திறந்து பொது விநியோகம் செய்ய அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்படும், புதுச்சேரியில் சுற்றுலா உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும் என்கிற அறிவிப்புகளை அறிவித்தார்.
“புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 70% மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததே பெரும்பாலான உயிரிழப்புகளுக்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் எந்தவித அச்சமோ, தயக்கமோ இல்லாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். போதுமான தடுப்பூசிகள் உள்ளது” என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.
பண்டிகைகள் வருவதால் பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி பாதுகாப்புடன் கொண்டாட வேண்டும் விடுதலை நாள் விழாவில் முதல்வர் ரங்கசாமி கேட்டுக்கொண்டார். விடுதலை நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை சாலையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடற்கரை சாலை முழுவதும் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.







