மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரிகள் உயர்த்தப்பட்டதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் 600 சதுர அடிக்கும் குறைவாக உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 25 சதவீதம் மட்டும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.
601 முதல் ஆயிரத்து 200 சதுர அடி வரையிலான கட்டடங்களுக்கு 50 சதவீத வரி உயர்வும், 1,201 முதல் 1,800 சதுர அடி பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 75 சதவீத வரி உயர்வும், ஆயிரத்து 800 சதுர அடிக்கும் அதிகமாக உள்ள கட்டடங்களுக்கு 100 சதவீத சொத்து வரி உயர்வும் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
https://twitter.com/EPSTamilNadu/status/1510087790192603136
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சட்டமன்ற தேர்தலில் ஆட்சி பொறுப்பேற்றதற்கு பரிசாக பொங்கல் சிறப்பு தொகையை தராமல் திமுக அரசு கைவிரித்ததாக சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், நகர்புற உள்ளாட்சியில் ஆளுங்கட்சிக்கு வாய்ப்பளித்த மக்களுக்கு சிறப்பு பரிசாக 150 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தியுள்ளதாக சாடியுள்ளார். இந்த சொத்து வரி உயர்வு வெறும் ட்ரைலர்தான் எனக் குறிப்பிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, இது வெறும் ட்ரைலர்தான் இனிவரும் காலங்களில் மக்களுக்கு பல பம்பர் பரிசுகள் காத்திருப்பதாக பதிவிட்டுள்ளார்.







